சென்னை வேளச்சேரி ஏரி மற்றும் அதன் வரத்து கால்வாய்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஏரியின் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் கழிவுநீர் கலப்பது போன்ற முக்கியப் பிரச்சினைகள் இந்த விசாரணையில் அடங்கும். வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமாரதாசன் தாக்கல் செய்த மனுவும் இந்த வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படுகிறது.
முந்தைய விசாரணையின்போது, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள 118 ஏக்கர் நிலத்தில் புதிய ஏரி ஒன்றை உருவாக்க முடியும் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது. இதன் மூலம் வேளச்சேரி பகுதியை மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், இந்த 118 ஏக்கர் நிலம் பசுமைப் பூங்கா அமைப்பதற்காகத் தோட்டக்கலைத் துறைக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கேள்வியெழுப்பிய தீர்ப்பாயம், "ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது?" எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்துத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ‘பசுமை பூங்காவை மேம்படுத்துவதற்காக அந்த நிலம் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. வருவாய்த்துறை மூலமோ அல்லது தோட்டக்கலை துறை மூலமோ இந்த நிலம் முறையாக தங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும், ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தபடி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’, இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.