திமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.
தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் ஏற்கனவே வகித்து பல பதவிகளில் ஒன்றான மாநில இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். திமுகவில் கடந்த 1984ம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராக மு.க. ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், 32 ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவிற்கு புதிய இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் சாமிநாதன் தான்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க இருப்பதாக பரவலாகப் பேச்சு நிலவி வரும் நிலையில், அவருக்கு வழிவிடும விதமாக, சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமை அவரது ராஜினாமா கடிதத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும், உதயநிதிக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்பதே பெருவாரியான நிர்வாகிகளின் விருப்பமாக இருப்பதாக நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதுகுறித்து, அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் பேசிய, உதயநிதியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா,"கட்சிப் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்க வேண்டும் என்பது எங்கள் பலரது விருப்பமாகும். இதைக் கட்சி மேலிடத்திலும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். ஆனால், அவரை அப்பதவிக்கு தேர்வு செய்வது என்பது தலைமையின் முடிவு. உதயநிதி அப்பதவிக்கு வந்தால், நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவோம். அந்த அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் உழைத்திருக்கிறார். கட்சித் தலைமையின் முடிவு எதுவாயினும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம்” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாமிநாதன் பதவி விலகியதையடுத்து, உதயநிதிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.