கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
முன்னதாக, கோவை வெள்ளலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 29) மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் ஆணையாளர் பிரதாப் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்த தீர்மானங்கள் வெளியாகும் என கூறப்பட்டது. இதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்வதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் திமுக அரசிற்கு எதிராகவும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பணத்தை வீணாக்க கூடாது என வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி முன்பாக கோஷம் எழுப்பினர்.
மேலும் மக்கள் உழைப்பு வரிப்பணத்தில் கட்டிய வெள்ளலூர் பேருந்து நிலையத்தை கைவிடுறிங்கோ. நிறுத்தாதீங்க நிறுத்தாதிங்க வெள்ளலூர் பேருந்து நிலைய வேலையை நிறுத்தாதீங்க. வெள்ளலூர் பேருந்து நிலைய பணியை கைவிடாதீங்க என பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து ஆணையாளர் பிரதாப் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒன்றிய அரசின் 'ரைட்ஸ்' என்ற அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் இதற்கான அறிக்கையை மாநகராட்சியிடம் தருவார்கள்.
தற்போது வரை வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ரைட்ஸ்சின் அறிக்கை வந்தவுடன் தான் முடிவெடுக்கப்படும் என ஆணையாளர் பிரதாப் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.