வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, மலை கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் , அணைகட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் உடல் முழுவதும் விஷம் பரவி நடுவழியிலேயே குழந்தை உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வுக்குப் பிறகு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால், பாதியில் பெற்றோர் இறக்கிவிடப்பட்டனர். இதனால் 10 கிலோ மீட்டர் பெற்றோரே குழந்தையின் உடலை சுமந்து சென்றனர். இந்நிலையில் இச்செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தவர், அல்லேரி மலைக் கிராமத்தில் சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தனர். மேலும் சாலையை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil