scorecardresearch

வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் தங்கியிருந்து கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும்

T.Velmurugan, Tamilar Valvurimai Katchi
தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி: சென்னையில் ஐபிஎல் நடப்பதை தடை செய்ய வேண்டும். மீறி நடத்தினால், மைதானத்தில் போராட்டம் நடத்துவோம். சென்னை வீரர்களை சிறைப் பிடிப்போம். பின்னர் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்க்கு இரண்டு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நெய்வேலி அனல்மின் நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் அவரின் செயல்பாடு உள்ளது என குற்றம் சாட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சிலர் தாக்கினர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேல்முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், காவல்துறை வேண்டும் என்றே கைது செய்து உள்ளதாகவும் ஏற்கனவே இதே வழக்குகளில் விசாரணை செய்து விடுவித்த பிறகு கைது நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளதாகவும், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, இரண்டு வழக்குகளில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழக்குவதாகவும், மறு உத்தரவு வரும் வரை கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் தங்கியிருந்து கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Velmurugan got conditional bail