தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடைப்பெற்ற 100 ஆவது நாள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பாவி பொதுமக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைக்கண்டித்து நேற்றைய தினம் திமுக கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நேற்று (25.5.18) தூத்துகுடிக்கு சென்றார்.
ஆனால், அவரை தூத்துகுடி விமான நிலையத்திலேயே மடக்கிய போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில், இன்று திடீரென தூத்துகுடிக்கு விரைந்த விழுப்புரம் போலீசார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காவிரி மேலாண்மை அமைக்ககோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு கட்சித் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தொடர்பாக தான் வேல்முருகன் இன்று(26.5.18) தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.
வேல்முருகனை 15 நாள் காவலில் வைக்க திருக்கோவிலூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதால் அவரை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரின் கைதை கண்டித்து, தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சென்னை போரூர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
ஏற்கனவே, சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் கைதான வேல்முருகனை விடுவிக்க கோரி இன்னொரு சங்கச்சாவடியை அவரது கட்சியினர் தாக்கி இருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
படங்கள் : ஜெ.நிதின் குமார்