தமிழ் தாய் வாழ்த்து பிரச்னை: வேல்முருகன் தலைமையில் ரிசர்வ் வங்கி முற்றுகை
தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத விவகாரம்; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்
Velmurugan TVK party protest in RBI for Tamil thai vazhthu issue: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ஆர்.பி.ஐ அதிகாரிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Advertisment
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டதோடு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாதது சர்ச்சையானது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
Advertisment
Advertisement
இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் தமிழக அரசின் அரசாணை குறித்து தெரிக்க முயன்றபோது, அந்த அதிகாரிகள் அதனை கேட்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பிரச்சனை தீவிரமடைந்ததையடுத்து ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய வேல்முருகன், எங்கள் கட்சியின் சார்பாக, தமிழ் தாய் வாழ்த்தை மதிக்காத அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். என்று கூறியுள்ளார்.