அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் தலைமை செயலக வளாகத்தில் வெளியிட்டார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவில் ஆயிரம்விளக்கு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்போதிலிருந்தே, ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சசிகலாவை முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட போது, முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், திடீரென ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார்.
ஆனால் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். எடப்பாடி கே.பழனிச்சாமி முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரும் சசிகலா தரப்பில் இருந்து விலகி, ஓபிஎஸ் அணியோடு இணைந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டனர். அவர் தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதணன் போட்டியிடுகிறார். டிடிவிதினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டார். சுமார் 20 செக்கண்ட் ஓடக் கூடிய இந்த காட்சியில் ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்திருந்தபடியே, டிவி பார்த்துக் கொண்டே, ஜூஸ் அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :
அம்மா உயிருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவிடக் கூடாது என்பதற்காக என்னை தடுத்துப் பார்த்தார்கள். அதையும் தாண்டி இங்கே வந்துள்ளேன். ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். அவர் மறைந்தாலும் புகழோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்களின் தூண்டுதலால் சிலர் அதை சொல்லி வருகிறார்கள்.
இந்த வீடியோவை சின்னம்மா சசிகலாதான் எடுத்தது. அப்பலோ மருத்துவமனையில் ஐசியூவில் இருந்து வெளியே வந்த பின்னர், ஜெயலலிதா சொல்லித்தான் சசிகலா எடுத்தார். ஓ.பன்னீர் செல்வத்துக்கோ, எடப்பாடி பழனிச்சாமிக்கோ இது தெரியும். அதனால்தான் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அவர்கள் வேலை செய்தார்கள். ஆனால் இன்று அவர்கள் இருவரும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தெரியாது போலவே பேசுகிறார்கள்.
இந்த வீடியோவை வெளியிட மாட்டேன் என்று சொல்லித்தான் என்று வாங்கினேன். ஆனால் எனது மனம் கேட்காமல் இன்று வெளியிட்டுவிட்டேன். இன்னும் சில வீடியோக்கள் இருக்கிறது. அதை தேவைப்படும் போது வெளியிடுவேன்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் இந்த வீடியோவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த வீடியோவை கவர்னர் பார்த்திருக்கிறார். அதை அவர் கடிதமாக கொடுத்துள்ளார். இந்த அரசாங்கத்துக்கு இது கண்டிப்பாக தெரியும். தேர்தலுக்காக இதை நாங்கள் வெளியிடவில்லை. தேர்தல் பற்றிய கேள்வியை மட்டும் கேட்காதீர்கள். அது பற்றி பதில் சொல்லமாட்டேன்.
இவ்வாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.