VGP Golden beach security The statue man passed away due to covid19 : சென்னை வந்து இறங்கியதும் பலருக்கும் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இருப்பது என்னவோ கடற்கரைகளுக்கு செல்ல வேண்டும் என்பது தான். குடும்பத்துடன் பொழுதினை கழிக்க பலரும் கடற்கரையோரங்களில் அமைந்திருக்கும் ரெசார்ட்களில் பொழுதினை கழிப்பது வழக்கம்.
அப்படி ஒரு பொழுது போக்கு அம்சத்திற்கு பெயர் போனது தான் வி.ஜி.பி. தங்ககடற்கரை ரெசார்ட். ரெசார்ட்டை பார்க்க செல்வதை காட்டிலும் அங்கே வாசலில் காவலுக்கு நிற்கும் தாஸை பார்க்க செல்லும் நபர்கள் தான் அதிகம் என்று கூற முடியும். 60 வயதாகும் தாஸ் 1991ம் ஆண்டில் இருந்து, கிட்டத்தட்ட 30 வருடங்களாக, அங்கு நுழைவாயில் காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு சிலை மனிதன், சிரிக்காத மனிதன் என்று பல பெயர்கள் இருக்கிறது.
அவர் அருகே யார் சென்று சிரிப்பு மூட்டினாலும், அசையாமல் சிலை போலவே நிற்பது அவரின் வழக்கம். கொரோனா காராணமாக அவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் நலமுடனும் உயிருடனும் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜிபியில் நான் சிலை மனிதனாக இருக்கின்றேன். வதந்திகள் கிளம்பி நான் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நலமுடன் தான் இருக்கின்றேன். விஜிபி மறுபடியும் திறந்த பின்பு என்னை நீங்கள் வந்து சந்திக்கலாம் என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார் தாஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil