/indian-express-tamil/media/media_files/2025/09/09/coimbatore-2025-09-09-14-03-20.jpg)
Coimbatore
கோவை: இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவையில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டம் பாஜக சார்பில் புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களம் காணும் சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெற்று, துணை குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார் என்றார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் கட்சியில் சாதாரண தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் என்று குறிப்பிட்ட அவர், இந்திய தேசத்தின் துணை குடியரசுத் தலைவராக ஒரு தமிழராக அவரது பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ், தமிழர் என்று பேசுகின்ற திமுக, துணை குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் நிற்கும் பொழுது, அவருக்கு ஆதரவு அளிக்காமல் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்து வருகின்றன என்றும், அவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் சாடினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன என்றும், தங்கள் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அதற்காக அனைவரும் ஓரணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதைத்தான் பாஜகவும் நினைத்து செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், கூட்டணியில் இருக்கின்ற குழப்பங்கள் சரி செய்யப்படும் என்றும், திமுகவிற்கு எதிராக வியூகத்தை வகுத்து வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.
அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்கிறார் என்றால் அது கூட்டணி தொடர்பான விஷயமாக இருக்கலாம் என்றார். மற்ற தலைவர்கள் டெல்லி சென்று தலைவர்களை சந்திக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், ஆதாரம் இல்லாமல் செய்தியாளர்கள் நீங்களாகவே பிரேக்கிங் போடுகிறீர்கள் என்றும், தங்கள் டிஆர்பிக்காக தான் எதையும் கூற முடியாது என்றும், மற்ற தலைவர்கள் கருத்துக்கும் தான் பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய் குறித்து அடுத்த செய்தியாளர் சந்திப்பில் பேசுவதாக தெரிவித்த அவர், இன்று சி.பி. ராதாகிருஷ்ணன் மட்டும் தான் செய்தி எனவும் கூறிவிட்டுச் சென்றார்.
பி. ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.