/indian-express-tamil/media/media_files/2025/08/24/stalin-cpr-2025-08-24-18-30-15.jpg)
Vice President Election 2025
அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் களமிறங்கியுள்ளனர். இரு வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் சென்னை வந்தடைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு விருந்து வைத்து ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “அரசியலமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள். நமது அரசமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர்; இதெல்லாம் பழைய ட்ரிக்” என்று அவர் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.