விதிகளை மீறி தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். வந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது மருத்துவமனை பிரசவ அறையில் இருந்த இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி உள்ளார்.
மருத்துவர் ஒருவர் கத்தரிக்கோல் கொடுக்க அவர் இதை செய்தார். இதை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் கடந்த 19-ந் தேதி இர்பான் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில், இர்பானின் செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மருத்துவத் துறை இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோவை நீக்க எச்சரித்தது. அதன்படி, இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
தொடர்ந்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இர்பான் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "யூடியூபர் இர்பான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்பான் தமிழ்நாடு திரும்பியதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“