நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரூ. 3.59 கோடி அளவில் சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் உதவி பொறியாளராக பொறுப்பு வகித்து வருபவர் லெனின். பல ஆண்டுகளாக இப்பொறுப்பில் இருக்கும் இவர், பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக சொத்து வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு இது தொடர்பான புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், உதவி பொறியாளர் லெனின் மற்றும் அவர் மனைவி ஆகியோர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கியது கண்டறியப்பட்டதாக தெரிகிறது.
அந்த வகையில், உதவி பொறியாளர் லெனின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தவிர, தங்களது குழந்தைகளையும் மிக அதிகமாக செலவு செய்து அவர்கள் படிக்க வைப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மேலும், 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு வருமானத்திற்கு அதிகமாக ரூ. 3.59 கோடிக்கு சொத்து சேர்த்ததாக உதவி பொறியாளர் லெனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.