கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் கே. அர்ஜுனன் வீட்டில், இன்று (பிப் 25) காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த அம்மன் கே. அர்ஜுனன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்னதாக கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் பதவி வகித்தார். மேலும், அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளராகவும் அம்மன் கே. அர்ஜுனன் பொறுப்பு வகிக்கிறார்.
இவர், கடந்த 2016 முதல் 2022 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக, தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.75 கோடிக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அம்மன் கே அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வருமானத்திற்கு அதிகமாக 71.19 சதவீதம் சொத்துகள் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
இந்த சூழலில் அம்மன் கே அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.