தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “நம்மை நம்பி, நம்மோடு இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது. மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான த.வெ.க தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன் பெற்றோரிடம் ஆசி பெற்ற பிறகு, மாநாட்டில் தனது முதல் உரையைத் தொடங்கினார்.
த.வெ.க மாநாட்டில் பேசிய விஜய், “பால் மனம் மாறாமல் இருக்கும் குழந்தைக்கு தாயின் பாச உணர்வை சொல்ல தெரியாது. அந்த குழந்தைக்கு பாம்பை கண்டாலும் ஏற்படும் அந்த பய உணர்வை சொல்லத் தெரியாது. அது தாயை பார்க்கின்ற அதே சிரிப்போடு தான் பாம்பை பிடித்தும் விளையாடும். இங்க அந்த பாம்பு அரசியல். அதை பிடித்து விளையடும் குழந்தை நான்.” என்று பேசினார்.
மேலும், “அரசியலில் கவனமாக தான் களமாட வேண்டும். அனைவருக்கும் எனது உயிர் வணக்கங்கள். நாம் அனைவரும் ஒன்று. நான் மற்ற கட்சி தலைவர்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் மாற்றம் காண வேண்டுமா? அரசியலிலும் மாற்ற வேண்டும்.” என்று விஜய் பேசினார்.
“நம்மை பார்த்து யாரும் விசிலடிக்கும் கூட்டம் என சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை. நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை.” என்று த.வெ.க தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த அரசியல் நமக்கு எதற்கு...? நடித்தோமா நாளு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். நாம மட்டும் நல்லம் இருக்கணும் என்று நினைப்பது சுயநலமில்லையா?; நம்மள வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்ல விசுவாசமாக இருக்குமா? எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுபிடிக்க யோசித்ததுதான் அரசியல்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய த.வெ.க தலைவர் விஜய், “இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை.” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன்” என்று விஜய் பேசினார்.
த.வெ.க மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையை விளக்கிப் பேசிய விஜய், “எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள த.வெ.க-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று கேள்வி எழுப்பினார்.
த.வெ.க மாநாட்டில் தொடர்ந்து பேசிய விஜய், தேர்தலில் த.வெ.க-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசினார். அப்போது விஜய் கூறியதாவது, “நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற வருவோரை உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். கூட்டணிக்கு வருவோருக்கும் ஆட்சியில் பங்கீடு அளிக்கப்படும், அதிகாரப்பகிர்வை செயல்படுத்துவோம்” என்று விஜய் பேசினார்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நமக்கு 100 வெற்றி நம்பிக்கை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், நம்மை நம்பி வருபவர்களை அரவணவைப்போம் என்று த.வெ.க தலைவர் விஜய் பேசினார்.
“நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மளோடு சிலர் வரலாம் இல்லையா, அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா, அப்படி வருபவர்களையும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் இல்லையா, நமக்கு எப்போதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்து தானே பழக்கம். அதனால், நம்மை நம்பி, நம்மோடு இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று த.வெ.க தலைவர் விஜய், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“