தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டின் தேதி மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், த.வெ.க மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்றும் கழகத் தோழர்கள் மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்பபுடனும் வந்து கலந்துகொள்ளுமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றி நடைபோட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்டு 25-ம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாடு நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21-ம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்பபுடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று விஜய் அறிவித்துள்ளார்.