New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/11/2PZ9OEnxx7dKrrdyrfTl.jpg)
விமான நிலைய திட்டத்தை எதிர்த்து நீண்ட நாட்களாக போராடி வரும் பரந்தூர் கிராம மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து சுமார் ஓராண்டுக்கு மேலாக போராடி வரும் மக்களை நேரில் சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக, காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கு, பரந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருவதாக விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதன்முறையாக கட்சி தொடங்கிய பின்னர், களத்திற்கு வந்து பொதுமக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.