நடிகர் விஜய் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இன்று (13.8.18) காலை 4 மணி அளவில் சென்னை வந்த அவர் நேராக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார்.
நடிகர் விஜய் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி :
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் காலமானர். அவரின் இறப்பு திமுக தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பின்பு, அவரின் பூத உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் என அனைவரும் நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்யால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அவரது சார்பில் அவரின் மனைவி சங்கீதாவும், அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை சென்னை வந்த நடிகர் விஜய், ஏர்போர்ட்டிலிருந்து நேராக காலை 4 மணியளவில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார். பின்பு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.