/indian-express-tamil/media/media_files/2024/12/18/be9wIoPvQwuanmuRFmqJ.jpg)
சென்னை பத்திரிக்கையாளார் மன்றத் தேர்தலில்,வெற்றி பெற்றவர்களுக்கு, நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி செயல்பட த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளார் மன்றத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கு, நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி செயல்பட த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கடைசியாக 1999-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவும் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
அதன்படி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.