குஜராத்தில் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு துன்புறுத்தல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் நித்யானந்தாவிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என்று டுவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை சிறை வைத்தல் தொடர்பான வழக்கு அண்மையில் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தின் கிளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி 4 குழந்தைகளை மீட்டனர். இதையடுத்து, ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் சீடர்களை போலீசார் கைது செய்தனர். நித்யானந்தாவின் ஆசிரமம் செயல்படுவதற்கு இடம் அளித்த பள்ளியின் முதல்வரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு இடம் அளித்தது தொடர்பாக பதிலளிக்குமாறு அந்த பள்ளிக்கு அகமதாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. பள்ளி கட்டுவதற்கு வழங்கப்பட்டு இருந்த தடையில்லா சான்றிதழில் நிலத்தின் விவரங்கள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பாண்டே தெரிவித்தார். எனவே இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதனிடையே, நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அகமதாபாத் போலீசார் தெரிவித்தனர். நித்யானந்தா வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் காவல்துறையிடமோ, உள்துறை அமைச்சகத்திடமோ இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் ரவிஷ்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அவ்வப்போது டிரெண்ட் செய்யும் நடிகர் விஜய் ரசிகர்கள் இன்று நித்யானந்தாவிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுங்கள் என்று #SaveGIRLSfromNithyananda ஹேஷ் டேக்குடன் டிரெண்ட் செய்தனர்.
விஜய் ரசிகர்கள் அவருடைய படத்தைப் பற்றியும் விஜய் பற்றியும் ட்ரெண்ட் செய்வதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது சமூக பிரச்னைளையும் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்த வகையில், விஜய் ரசிகர்கள் சர்ச்சை சாமியார் நித்யானந்தா பற்றி விமர்சித்தும் அவரிடமிருந்து பெண்களைப் பாதுகாப்போம் என்றும் டுவிட் செய்து டிரெண்ட் ஆக்கியுள்ளனர். இதனால், நித்யானந்தா விவகாரம் சமூக ஊடகங்களில் தேசிய அளவில் கவனம் பெற்றது.