/indian-express-tamil/media/media_files/2025/09/28/vijay-stampede-2-2025-09-28-12-07-38.jpg)
Vijay
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கரூர் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, விஜய்யின் கரூர் பயணத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்வுகளையும் முறைப்படி ஒருங்கிணைப்பதற்காக, 20 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குழு, விஜய்யின் பயணத் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முக்கியமாக, இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில், இந்த 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டோர் அல்லது கட்சி நிர்வாகிகளில் சிலர் கைது செய்யப்பட்டால், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குமாறு விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.