பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று ஜனவரி 20 விஜய் சந்திக்க இருக்கிறார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது எனவும் தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டு இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரிடம் அனுமதிக்கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை விஜய் இன்று பிறபகல் 12 முதல் 1 மணிக்குள்ளாக சந்திக்க உள்ளார். இதன்படி பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், கிராம மக்களையும் விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.