நடிகர் விஜய் நடித்த புலி படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 - 2017 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கு வருமானமாக 35 கோடியே 42 லட்சம் ரூபாய் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, அதன் அடிப்படையில், விஜய் புலி படத்தில் நடித்ததற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தைக் கணக்கில் காட்டாமல் வருமானத்தை மறைத்துள்ளார் என்று கூறி 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
வருமான வரித்துறை விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரித்துறை அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் 2019 ஆம் ஆண்டே அபராதம் விதித்திருக்க வேண்டும். காலதாமதமாக அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமனா வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு வருமான வரித்துறை சார்பில் அவகாசம் கேட்டதை அடுத்து, ஏற்கெனவே இந்த வழக்கில், விதிக்கப்பட்ட இந்த இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"