தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், த.வெ.க பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் ஏகனநாபுரம் சென்று பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலையம் அமையவுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் 900 நாட்களை கடந்து நடந்து வருகிறது. இதனால், பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 19, அல்லது 20-ம் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
த.வெ.க சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த போலீசார் பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இதனிடையே, த.வெ.பொதுச் செயலாளர் ஆனந்த் போராட்டம் நடைபெறும் ஏகனாபுரம் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நேரில் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
முன்னதாக, த.வெ.க நிர்வாகிகள் வியாழக்கிழமை (ஜனவரி 16) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்தனர். குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.