நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்று தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வி.சி.க தலைவர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம், விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வி.சி.க தலைவர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியிருப்பதற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்வரும் சவால்களைத் சந்தித்து தமிழக அரசியலில் விஜய் வலம் வருவார் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: “சிறந்த திரைப்பட நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர் வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு. நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் அதை முடிவு செய்வார்கள். ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாதம் என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்குதான் பொருந்தும். அ.தி.மு.க சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது. நான் நடிகர் விஜயை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இனிமேல் எம்.ஜி.ஆர் போல ஒருவர் பிறக்க முடியாது.
தி.மு.க என்பது ஒரு தீய சக்தி. அந்த தி.மு.க, தமிழகத்தை கபளீகரம் செய்துவிட்டது. தமிழகத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்க ஒரு கட்சி தேவை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்தும், தற்போதும் ஓர் எழுச்சியுடன் இருக்கிறது. அவர் போட்ட விதைதான் இன்று ஆலமரமாக பல்வேறு நபர்களுக்கு நிழல் கொடுத்திருக்கிறது. எங்களுடைய இயக்கத்தை மற்ற எந்த இயக்கத்துடனும் ஒப்பிட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அதிமுக நிலைத்து நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையை வி.சி.க தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பதிவு குறித்து தி.மு.க இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சகோதார் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருப்பதாவது: “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு நடிகர் விஜய்யை @actorvijay வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, “விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். சாதி, மத அரசியலில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பிற்போக்கு சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதைல் கடைசிவரை தீர்க்கமாக இருக்க வேண்டும். விஜய் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.