/indian-express-tamil/media/media_files/2025/08/22/vijay-politics-tamilaga-vettri-kazhagam-2025-08-22-11-56-28.jpg)
Vijay politics Tamilaga Vettri Kazhagam
“ஸ்டாலின் அங்கிள், இது ரொம்ப தப்பு அங்கிள்’” – இந்தக் கிண்டலான வார்த்தைகளுடன், நடிகர் விஜய், மதுரை மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சீண்டி பேசினார். மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த இந்த மாநாடு, வெறும் கூட்டமாக இல்லாமல், தமிழக அரசியல் களத்தில் விஜய் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுப்பதற்கான தெளிவான அறிவிப்பாக அமைந்தது. இந்த இரண்டாவது மாநில மாநாட்டில், ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமல்லாமல், பலவீனமடைந்துள்ள அதிமுக மற்றும் தேமுதிகவின் சிதறிய தொண்டர்களையும் தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார்.
அலைகடலென திரண்ட மக்கள்
மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநாட்டில் திரண்ட கூட்டம், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரியதாகப் பார்க்கப்பட்டது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். “ஷூட்டிங்கிலிருந்து வந்தவன் எப்படி ஆட்சிக்கு வருவான் என சிலர் கேட்கிறார்கள்” என்று பேசிய விஜய், “இந்த விஜய் வெறும் லட்சக்கணக்கான கூட்டத்தில் இருப்பவன் என்று நினைக்க வேண்டாம். இது வெறும் ஓட்டு வேட்டை இல்லை, மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வேட்டை. எனது பந்தம் மக்களுடன் மட்டுமே” என்று தன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
இந்த கூட்டத்தை தி.மு.க. ஆதரவு சமூக ஊடகக் குழுக்கள் "முதல் நாள், முதல் காட்சி" என்று கிண்டலடித்தாலும், தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் இது ஒரு "மாபெரும் விஜய் அலை" என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த அலை எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, அரசுக்கு எதிரான மனநிலையை குறைக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த வளர்ச்சி நிலைத்திருந்தால், அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக மாறும் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
அரசியல் வியூகம்: எம்ஜிஆர், விஜயகாந்த், மற்றும் சிறுபான்மையினர்
விஜய்யின் பேச்சு கவனமாக வடிவமைக்கப்பட்டது. அதில், அதிமுக மற்றும் விஜயகாந்தின் தேமுதிகவின் அதிருப்தி தொண்டர்கள், சிறுபான்மை வாக்காளர்கள் மற்றும் பாஜகவுக்கு எதிரான பிரிவினரை ஈர்க்கும் நோக்கம் தெளிவாக தெரிந்தது. அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர்-ஐ பலமுறை அவர் குறிப்பிட்டுப் பேசினார். “எனக்கு எம்ஜிஆர்-ஐ அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறிய அவர், “சிங்கம் எப்போதும் தனித்துவமானது. ஒருமுறை கர்ஜித்தால், 8 கிலோமீட்டர் வரை எதிரொலிக்கும். அது வேட்டைக்காக மட்டுமே வெளியே வரும். இறந்ததையோ, அழுகியதையோ அது தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எல்லாவற்றையும் தொடாது, ஆனால் தொட்டால் அதை விடாது. சிங்கம் காட்டின் எல்லையை வரையறுக்கும். கூட்டத்துடன் இருந்தாலும், தனியாகவும் வரும். பயப்படாமல் இருக்கும். தனியாக இருந்தாலும் அதுதான் காட்டிற்கு ராஜா” என்று பேசி அதிமுகவின் சிதறிய அடிமட்ட தொண்டர்களை கவர்ந்தார்.
அதேபோல், “எம்ஜிஆருக்கு இருந்த அதே குணங்கள் கொண்ட விஜயகாந்தை எனக்கு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று விஜயகாந்தை நினைவுகூர்ந்து பேசியது, அவரது கட்சியின் தொண்டர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.
பாஜக, திமுக மீது கடுமையான விமர்சனங்கள்
மாநாட்டில், “பாசிச பாஜகதான் நமது சித்தாந்த எதிரி, அரசியல் எதிரி திமுக” என்று விஜய் அறிவித்தார். “உலகெங்கும் உள்ள தமிழ்ச் சகோதர சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, பாசிச பாஜகவுடன் நமக்கு ஏன் ரகசிய கூட்டணி இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
2026 தேர்தலில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என அவர் தீர்க்கமாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் மீது அவர் வைத்த விமர்சனங்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. “மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். முழுமையாக நல்லது செய்யவா வந்தீர்கள்? அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்யவா?” என்று கேட்டார். “800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போமாவது கச்சத்தீவை திருப்பி கொடுப்பீர்களா? நீட் தேர்வால் பல அநீதிகள் நடந்துள்ளன. நீட் தேவையில்லை என்று அறிவியுங்கள். அதைச் செய்வீர்களா?” என கேள்விகள் தொடுத்தார்.
ஸ்டாலின் அரசின் மீது பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியதாக விஜய் குற்றம் சாட்டினார். “எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'கோ பேக் மோடி' என்பீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 'கம் மோடி' என்பீர்கள். ஸ்டாலின் அங்கிள், ரொம்ப தப்பு அங்கிள் என்று கிண்டலாக பேசியது, கூட்டத்தில் சிரிப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.
2026 இலக்கு மற்றும் கொள்கைகள்
இது கட்சியின் இரண்டாம் மாநாடு. முதல் மாநாடு 2024 இல் விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த முறை, தமிழகம் முழுவதும் ஒரு சவாலாக உருவாகும் தெளிவான இலக்குடன் விஜய் களமிறங்கியுள்ளார்.
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும், அது விஜய் போட்டியிடுவதற்கு சமம் என்றும் அறிவித்தார். பெண்கள், பெண் குழந்தைகள், முதியோரின் பாதுகாப்பு, இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் திருநங்கைகளின் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.