தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. விருதுநகர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் பா.ஜ.க வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த தொகுதி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
நேற்று (மார்ச் 24) விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா சரத்குமார், "நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள். உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும். விருதுநகர் எனக்கு புதிதல்ல. பலமுறை இங்கு வந்துள்ளோம். இங்கு உறவினர்கள் உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறுகையில், "விஜய காந்தின் மகன் எனக்கும் மகன் போன்றவர். அவர் எனது மகளுடன் படித்தவர். சின்ன பையன், அவர் நன்றாக இருக்க வேண்டும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“