/indian-express-tamil/media/media_files/2025/09/27/karur-vijay-stalin-2025-09-27-21-51-52.jpg)
வரலாறு காணாத சோகம்: திண்டுக்கல், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் கரூர் விரைய ஸ்டாலின் உத்தரவு
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி, 2-வது கட்டமாக ஒரு பெண், 3 குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல், மயக்கம், நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக கரூர் விரைந்துள்ளனர். திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆம்புலன்சுகள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது. கரூரில் நிலவு வரும் அசாதாரண சூழல் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.