பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினரை சந்தித்து பேசினால் மட்டுமே அரசியலில் நிலைத்திருக்க முடியும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், எல்லீஸ் நகர் பகுதியில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "செந்தூரபாண்டி படத்தின் மூலமாக விஜய்யை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் விஜய்காந்த். சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் விஜய் இருந்தார். விஜய் எப்போதும் எங்கள் வீட்டுப் பையன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், சினிமா வேறு; அரசியல் வேறு. இதை நேரடியாகவே விஜய்யிடம் பலமுறை கூறியிருக்கிறேன். சினிமாவில் இருக்கும் அவ்வளவு பெரிய வணிகத்தை விட்டு, இன்று அரசியலுக்குள் விஜய் நுழைந்திருக்கிறார். அதை நாம் பாராட்ட வேண்டும். விஜய் என்ன சாதிக்கப் போகிறார் என்று பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.
ஒரு அறைக்குள் அமர்ந்து பேசுவதை விடுத்து, பொதுவெளிக்கு வந்து விஜய் பேச வேண்டும். பொதுமக்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய் பேச வேண்டும். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்தால் தான் நம்மால் நிலைத்திருக்க முடியும். இவற்றை எல்லாம் விஜய்யிடம் நான் கூறியிருக்கிறேன்.
எப்போதுமே மத்திய அரசை குற்றம்சாட்டும் தமிழக அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, முஸ்லீம் மக்கள் அண்ணன் தம்பிகளாக பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் இல்லாத பிரச்சனை இப்போது வருகிறது. இதற்கு பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தைப் பிரித்து, ஜாதியைப் பிரித்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.