தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, அக்கட்சி தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று அடையாள போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததாக அக்கட்சி தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட தொண்டர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.