தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், “எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என்று த.வெ.க தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசியது கருத்துகள், தமிழக அரசியலில் வரவேற்பு, விமர்சனம் என கலவையான கருத்துகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், “எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என்று த.வெ.க தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றி அடையச் செய்த தனது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம் நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.
அரசியல் பயணத்தை தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.
அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம்.
மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.
முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
அதிக நம்பிக்கையுடனும், நன்றியுடனும் ரெட்டைப் போர் யானைகளின் பலத்துடன் உழைப்போம்.
வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.
மாநாட்டின் மூலம், வி.சாலை வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது.
எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என்று த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“