/indian-express-tamil/media/media_files/2025/09/13/trichy-vijay-2025-09-13-16-06-14.jpg)
தமிழக தேர்தல் வரலாற்றில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படும் திருச்சியில் இருந்து, தனது முதல் தேர்தல் பரப்புரையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று தொடங்கினார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அவரது இந்த கன்னிப் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
திருச்சி - திருப்புமுனையின் மையம்
காலை 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் கடந்து, மதியம் 2:30 மணிக்கு பிரச்சார மையமான மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு வந்தார். சரியாக 3:00 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கிய அவர், "போருக்குப் போவதற்கு முன் குலதெய்வத்தை கும்பிடுவார்கள், அதுபோல தேர்தலுக்கு முன் மக்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
திருச்சியை ஒரு திருப்புமுனைக்கான இடமாக அவர் குறிப்பிட்டார். அண்ணா 1956-ல் தேர்தலில் நிற்க எண்ணியதும், எம்.ஜி.ஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்தியதும் திருச்சியில்தான் என்பதை சுட்டிக்காட்டினார். பெரியார் வாழ்ந்த, மதச்சார்பின்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற கொள்கை உள்ள மண் இது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருசில மண்ணைத் தொட்டால் நல்லது, நல்ல காரியங்களை அங்கிருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். திருச்சியில் தொடங்கினால் திருப்பம் ஏற்படும் என்று சொல்வார்கள்.
அடுக்கடுக்கான கேள்விகள்
திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் எழுப்பினார். "505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன?" என கேள்வி எழுப்பிய அவர், மாதாந்திர மின்சார கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், மற்றும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளின் நிலையை வினவினார்.
திருச்சி மக்களுடைய சத்தம் முதல்வருக்கு கேட்கிறதா என ஆவேசமாக கேட்ட விஜய், நாமக்கல் கிட்னி திருட்டு சம்பவம் பற்றியும் பேசினார். பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்தை "ஓசி" என்று சொல்லி அசிங்கப்படுத்துவதாகவும், அனைத்து மகளிருக்கும் ₹1000 கொடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தொண்டர்கள் ஏமாற்றம்
அதேவேளையில், தனது பேச்சின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மைக் வேலை செய்யாததால், விஜய் சற்று பதற்றமடைந்தார். இதனால், பல மணி நேரம் ஆர்வத்துடன் காத்திருந்த தொண்டர்கள் முன்னிலையில், அவர் தனது பேச்சை வெறும் 15 நிமிடங்களில் சுருக்கிக் கொண்டு அரியலூருக்குப் புறப்பட்டார்.
இந்த திடீர் முடிவால், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்தின் விளிம்பில் சோகத்துடன் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கடை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
த.வெ.க. அரசு அமைந்தால் கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்கும் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் விஜய் உறுதி அளித்தார். நடைமுறைக்கு சாத்தியமானவற்றையே தங்கள் கட்சி வாக்குறுதிகளாக அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். "வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திப்போம்," என கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?
மேலும் மாதா மாதம் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? கல்வி கடன் ரத்து என்றீர்களே, செய்தீர்களாம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றீர்களே, நிரப்புனீர்களா?, பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்றீர்களே, செய்தீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் எழுப்பினார்.
இந்நிலையில் விஜய் பேசிய மைக் தொழில்நுட்ப கோளாறால் வேலை செய்யாததால் தனது பேச்சை 15 நிமிடத்தில் சுருக்கி கொண்டு அரியலூருக்கு பயணம் ஆனார். தொண்டர்கள் ஏமாற்றத்தின் விளிம்பில் சோகத்துடன் விஜய் வாகனத்தை கடந்து சென்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.