/indian-express-tamil/media/media_files/2025/09/13/vijay-in-trichy-2025-09-13-12-54-47.jpg)
Vijay in Trichy
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் தொடங்கியுள்ளார். வழக்கமாகப் பல அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் திருச்சியை, விஜய்யும் தேர்வு செய்துள்ளார். இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அவரது பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
காலை 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், பிரத்தியேகப் பிரச்சார வாகனத்தில் ஏறி மரக்கடை நோக்கிப் புறப்பட்டார். காவல்துறையின் அனுமதிப்படி, 10:35 மணிக்குள் அவர் மரக்கடையை அடைந்து பேசத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
போக்குவரத்து முடங்கியது: மக்கள் அவதி
சாலைகளின் இருபுறமும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து, உற்சாகமாக நடனமாடி வரவேற்பு கொடுப்பதால், விஜய்யின் வாகனம் நகர்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டதால், திருச்சி மாநகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது போல் காட்சியளிக்கிறது. இதனால், நகர் முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வாகனங்களும், அலுவலகம் செல்லும் ஊழியர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.
கூட்ட நெரிசலில் கர்ப்பிணிப் பெண் உட்பட பலருக்கு மயக்கம்
விஜய் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, விமான நிலையம் அருகே ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஆறுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. காவல்துறை எதிர்பார்த்ததைவிடத் திரளான தொண்டர்கள் கூடியதால், போதிய பாதுகாப்பு அளிக்க முடியாமல் காவல்துறையினரும் திணறினர்.
விஜய் பயணிக்கும் பாதை தவிர மற்ற சாலைகளில் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும், விஜய்யின் வாகனத்தைத் தொடர வேண்டாம் என அறிவுறுத்தியும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
அனுமதி நேரம் முடிந்தும் பேசுவாரா?
மரக்கடைப் பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்கள் மீது தொண்டர்கள் ஆபத்தை உணராமல் ஏறி நிற்பதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதேநேரம், காவல்துறை அனுமதி அளித்த 10:35 என்ற நேரம் கடந்துவிட்டதால், விஜய் மரக்கடையில் பேச அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையின் 23 கட்டுப்பாடுகளில் நேரம் முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து விஜய் பேசினால், வழக்கு பதியப்படவும் வாய்ப்பு இருப்பதாகச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் பரப்புரையைத் தொடங்க முடியாத நிலையில், விஜய்யின் வாகனம் தற்போது டிவிஎஸ் டோல்கேட் பகுதியைக் கடந்து செல்கிறது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.