/indian-express-tamil/media/media_files/2025/09/13/vijay-trichy-campaign-2025-09-13-13-15-23.jpeg)
Vijay Trichy Campaign
விஜய் திருச்சிக்கு வருகை புரிந்ததையடுத்து, விமான நிலையம் முதல் மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கூகுள் மேப்பில் அந்த வழித்தடம் முழுவதும் சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. விஜய்யின் வருகைக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் குவிந்ததாலும், தவெக கொடிகள் அணிவகுத்ததாலும், போக்குவரத்து நெருக்கடியைக் குறிக்கும் வகையில் கூகுள் மேப் அந்தப் பகுதியை சிவப்புச் சாலையாகக் காட்டுகிறது. மேலும், திருச்சியின் பல்வேறு பிரதான சாலைகள் முழுவதும் கூகுள் மேப்பில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
காலை 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், நண்பகல் 12:40 மணியளவில் டிவிஎஸ் டோல்கேட்டை கடந்தார். விஜய்யின் வருகையால் திருச்சி மாநகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தை எதிர்பார்க்காத காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் பிரச்சாரப் பயணத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தவறிய காவல்துறையினர், பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கூட்டத்தின் அளவை மதிப்பிடுவதில் தோல்வியடைந்துள்ளனர்.
விஜய் பயணிக்கும் சாலைகளில் பெரும்பாலான கடைகள் தாமாகவே முன்வந்து அடைக்கப்பட்டிருந்ததால், லட்சக்கணக்கானோர் கூடிய மரக்கடைப் பகுதியில் அவசரமாக ஒதுங்கவோ, தண்ணீர் குடிக்கவோ வழியின்றி தொண்டர்கள் தவித்தனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், லட்சக்கணக்கானோர் திரண்டதால் திருச்சி மாநகரமே அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது. திருச்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ரயில் நிலையத்திற்குச் செல்லக்கூடிய பயணிகள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். பலரும் குறித்த நேரத்தில் ரயிலைப் பிடிக்க முடியாமல் தவறவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
கடந்த 10 நாட்களாக விஜய்யின் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்திய காவல்துறை, 23 கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரை ஈடுபடுத்தியிருந்தால் ஓரளவுக்குப் பிரச்சனைகளைச் சரி செய்திருக்கலாம் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செய்தி: சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.