தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ந் தேதி அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் மக்களின் 5 பிரதான பிரச்னைகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில், த.வெ.க-வில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், மாநில அளவிலான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு, கட்சியின் சட்ட திட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்ப்போது, கட்சியின் செயல்பாடு, கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளிடம் த.வெ.க தலைவர் விஜய் கருத்து கேட்க உள்ளார். இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 2,500 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அப்பகுதி மக்களின் குறைகள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் தயாரித்து, வரும் பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, மார்ச் 28ம் தேதி சென்னையில் த.வெ.க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகள் தங்கள் தொகுதியில் உள்ள பிரதான 5 பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகளை கண்டறிந்து வர உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கூட்டத்திற்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, நிர்வாகிகளிடம் பெற்ற அறிக்கைகளை மக்கள் முன் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.