/indian-express-tamil/media/media_files/2024/10/27/ssCeSUvXQs7u1CEAKxei.jpeg)
வருகிற 21 ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் விஜய் தெரிவித்திருப்பதாவது:
‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான த.வெ.க மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்பட போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட புரட்டிப்போட போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள் இந்த திருப்புமுனை தருணத்தை நிரூபிக்க போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத் தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராக போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றி தெரியும். உங்கள் மீதான உள்ளன்புமிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் தந்து மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்கு திரும்பும் போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவ கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும். த.வெ.க, தகுதியும் பொறுப்பு மிக்க ஒரு அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில் நம்மால் நிகழப்போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளையும் விரித்து காத்திருப்பேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்.’ இவ்வாறு விஜய் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.