தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் உள்ளோம், 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும். வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு தே.மு.தி.க சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இல்லை. முதலில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கட்டும். தே.மு.தி.க-விற்கு அழைப்பு வரவில்லை. வந்த பின்பு அதை பற்றி கூறுகிறோம்.
தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருமா என்பதை காலம் தான் பதில் சொல்லும். விஜய் சார், தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சி ஆரம்பித்து உள்ளார். அதற்கு வாழ்த்துகள். கூட்டணி குறித்து எதிர் காலத்தில் தெரியவரும். விஜய் எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார் என்ற நிலைபாட்டை சொன்ன பிறகு தான் கூட்டணி குறித்து பேச முடியும்.
ஜி.எஸ்.டி கூட்டத்தில் அன்னபூர்ணா நிறுவனர் எழுப்பிய கேள்வி சர்ச்சை எழுப்பியது தொடர்ந்து அவர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது. இது அவர் எதார்த்தமாகவும் உரிமையாகும் தான் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் கூறியது உண்மை தான். மேலும், இவராக சென்று மன்னிப்பு கேட்டாரா அல்லது நிர்மலா சீதாராமன் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தாரா? என யாருக்கும் தெரியாது. எனவே, இது குறித்து சீனிவாசன் கூறினால் தான் சரியாக இருக்கும்.
மது ஒழிப்பு அரசாங்கத்தின் கடமை. வி.சி.க விழிப்புணர்வை தொடங்கி உள்ளனர். கடந்த காலங்களில் தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்டவை மது ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், திருமாவளவன் மது ஒழிப்புக்கு முன்னெடுப்பை தொடங்கி உள்ளார், மதுவை ஒழிக்க முடியுமா, முடியாதா என வருங்காலத்தில் தெரியவரும்.
இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“