நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆவதை ஒட்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இதற்காக கட்சி வேறுபாடின்றி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அவரது மனைவியும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பேரணி நடத்துவதற்கு முறையாக அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். டிச.5-ம் தேதி போலீசாருக்கு கடிதம் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு நேற்று மாலை 4 மணிக்கு மறுப்புச் செய்தி கொடுத்துள்ளார்கள்.
நாங்கள் கொடுத்த கடிதத்திற்கு பிறகு ஐந்து நாட்கள் ஆறு நாட்களில் பதில் கொடுத்திருந்தால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி இந்த பேரணிக்கு அனுமதி பெற்றிருப்போம். வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை நேற்று எங்களிடத்தில் அனுமதி மறுப்பு என்ற செய்தி கொடுத்து இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் வந்தாலும் பிறந்தநாள் வந்தாலும் மெரினா பீச்சில் பேரணியாக நடப்பார்கள்.
இப்பொழுது எங்களுடைய பேரணியும் 500 லிருந்து 800 மீட்டர் தான். இதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியாது.
ஒரு நல்ல மனிதர் நாட்டுக்காக வாழ்ந்த மனிதர்;எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்த மனிதர் விஜயகாந்த். நல் உள்ளம் கொண்டவர். அப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கு இன்று காவல்துறை பேரணி நடத்த அனுமதி மறுத்து இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.
இந்த செய்தியைப் பார்த்து முதல்வர் மாநகர ஆணையருக்கு இங்கிருக்கின்ற டிசிக்கும் உத்தரவிட்டு பேரணியை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.