தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரண்டாம் கட்ட உயர் சிகிச்சைக்காக மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்கா சென்றார் விஜயகாந்த் :
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றிய நிலையில் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த போது விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
இதனால் கருணாநிதியின் இறுதி அஞ்சலிலும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் இருந்தப்படியே வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சிகிச்சை முடிந்த பின்பு சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நேரம் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் மிகவும் பொறுமையாக மனைவியின் துணையுடன் நடந்த காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விஜயகாந்த் இரண்டாம் கட்ட உயர் சிகிச்சைகாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்று, பின்னர் அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்கிறார். அங்கு, ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள இருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் , வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் ஏற்கனவே அவரது மகன் விஜய் பிரபாகரன் கூறியது குறிப்பிடத்தக்கது
இது குறித்து தேமுதிக சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வாழ்த்து கூறி பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.