/indian-express-tamil/media/media_files/HeuONuyNTevk1OdAtuOg.jpg)
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவ மனை அறிக்கை
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாகவே விஜயகாந்த்க்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18 ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்துக்கு சளி தொற்று சரியாவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விஜயகாந்த்க்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உடனடியாக தே.மு.தி.க அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது.
விஜயகாந்த் தொடர்ந்து ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்னர் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்தநிலையில், விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து இன்று தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், சிகிச்சைக்கு விஜயகாந்த் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.