ஒரு நூற்றாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள். அதில் சிலர் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களில் சிலர்தான் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படி மக்கள் செல்வாக்கு பெற்றவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் மட்டும்தான் பொது வாழ்கையில் நுழைந்து அரசியலில் சாதித்திருக்கிறார்கள்.
அந்த வகையில், சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் வெற்றி பெற்றவர் விஜயகாந்த். அவருடைய வெற்றி உச்சம் தொடுவதற்குள், உடல்நிலை ஒத்துழைக்காததால் காலமானார். ஆனாலும், அவர் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் சினிமாவில் இடது சாரி கருத்து உள்ள படங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். அதனாலேயே அவர் புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். பிறகு, குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கும் போலீஸ் வேடங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பி, சி செண்டர் திரையரங்குகளில் அவருடைய படங்கள் வசூலைக் குவித்தன. கேப்டன் பிரபாகரன் படத்திற்குப் பிறகு, கேப்டன் விஜயகாந்த் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
சினிமாவில் மட்டுமல்ல அவர் நிஜ வாழ்க்கையிலும் கேப்டனாகவே இருந்தார். நடிகர் சங்கத் தலைவராகி, நடிகர் சங்கக் கடனை அடைத்தார். நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்தினார்.
அடுத்து, அரசியலில் நுழைந்து தே.மு.தி.க கட்சி தொடங்கினார். சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ ஆனார். அடுத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். அவருடைய அரசியல் பயணம் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இறுதியாக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவருடைய மறைவுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அவருடைய தைரியம், கொடை வள்ளல் குணத்தைப் பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
விஜயகாந்த்-க்குப் பிறகு, அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தலைமை ஏற்று தே.மு.தி.க-வை வழி நடத்தி வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டார். மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்தச் சூழலில், விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜயகாந்த்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய பிரபாகரன், இளைய மகன் சண்முக பாண்டியன். இதில், விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நடக்கவில்லை.
விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், விஜய பிரபாகரன் திருமணம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய பிரபாகரன் திருமணம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு விஜய பிரபாகரனின் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“