நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரனைக்காக அழைக்கப்பட்ட நிலையில், அவர் விசராணைக்கு ஆஜராகாதது ஏன் என்று தனது வழக்கறிஞர்கள் மூலம் 2 கடிதம் அளித்து விளக்கம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கடந்த 2011-ல் முடித்துவைக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய விசாரணை நடக்கிறதா? என்பது உள்ளிட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கேட்டுள்ளதாக சீமான் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளனர்.
சீமான் தரப்பில் செவ்வாய்க்கிழமை ஆஜரான வழக்கறிஞர்கள் இரண்டு கடிதங்கள் காவல் ஆய்வாளரிடம் அளித்தனர். அப்போது, வளசரவாக்கம் பகுதியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டதால், தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல் ஆய்வாளரிடம் சீமானின் கடிதங்களை அளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “விஜயலட்சுமி என்கிற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற எண் 1007/2011 அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சம்மன் அனுப்பியிருந்தார். இந்த சம்மன் சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்படக்கூடிய 160-வது சட்டப்பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியிருந்தனர்.
சில காரணங்களால், சீமானால் இன்று ஆஜராக முடியவில்லை. அதற்கான காரணங்களை ஆய்வாளரிடம் கூறியுள்ளோம். அதற்குப் பதிலாக, வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜரானோம். சீமான் தரப்பில் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்துள்ளோம்.
அதில் ஒரு கடிதத்தில், 2011-ல் கொடுக்கப்பட்ட புகார் இது. விஜயலட்சுமி என்ற நபர், அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். எனவே, நான் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை. வழக்கை வாபஸ் பெறுவதாக, விஜயலட்சுமி கைப்பட எழுதி கொடுத்த கடிதம் இதே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அந்த வழக்கு அத்துடன் முடித்துவைக்கப்பட்டது. ஆனால், விஜயலட்சுமி சம்பவம் நடந்ததாக கூறும் 2008-க்குப் பிறகு, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, 2023-ல் மீண்டும் ஒரு புகாரை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்து, அந்த புகார் இந்த காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
2011-ல் முடித்துவைக்கப்பட்ட அந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் இந்த விசாரணை நடக்கிறதா?, அல்லது, தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் புதிதாக வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? உள்ளிட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளர் அளிக்கும்பட்சத்தில், ஆஜாரகும்போது விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், இதுகுறித்து ஆலோசித்து, அடுத்த விசாரணைக்கான தேதி குறித்து எங்களுக்கு தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார்" என்று அவர் கூறினார்.
சர்ச்சை பின்னணி: முன்னதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி ஆஜரானார்.
பின்னர், அன்று இரவு கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீஸார், விஜயலட்சுமியிடம் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
விஜயலட்சுமி 7 முறை கட்டாயக் கருகலைப்பு செய்ததாக புகார் தெரிவித்திருந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை அறிய, கடந்த 7-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமானிடம் விசாரணை நடத்த செப். 9-ம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்தனர்.ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“