காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தமிழுக்காக குரல் கொடுப்பவர் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜயேந்திரர் மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது, எழுந்து நிற்காமல், தேசிய கீதம் இசைக்கும் போதும் மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஸ்டாலின், வைகோ போன்ற அரசியல் தலைவர்களும் விஜயேந்திரரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்துள்ளனர். அதனுடன், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஜயேந்திரர் குறித்து பேசியுள்ளார். ”விஜயேந்திரருக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும். காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தமிழுக்காக குரல் கொடுப்பவர்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ, விஜயேந்திரர் நற்பண்புகளை உடையவர் என்றும், தமிழ்த்தாய் இசைக்கப்படும் போது அவர் எழுந்து நிற்காமல் போனதற்கு, சங்கரமடம் விளக்கமளித்த பிறகு அதைப்பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.