/tamil-ie/media/media_files/uploads/2022/10/Vijaykumar-IPS.jpg)
உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகராக செயல்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் மத்திய அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். 1975-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர். விஜயகுமார் முதலில் பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.
இதையடுத்து, விஜயகுமார் ஐ.பி.எஸ் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு, ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக இருந்தார். மீண்டும் தமிழக காவல் பணிக்கு திரும்பிய விஜயகுமார் ஐ.பி.எஸ் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றினார். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானபோது, விஜயகுமார் அவருடைய மெய்க்காவல் படை தலைவராக இருந்தார்.
இதையடுத்து, விஜயகுமார் ஐ.பி.எஸ் சென்னை காவல் ஆணையராகவும், கமாண்டோ படை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற ஆபரேஷனில் இருந்தார்.
தமிழக காவல் பணியில் சிறப்பாக செயல்பட்ட, விஜயகுமார் ஐ.பி.எஸ் மீண்டும் மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டார். மத்திய ஆயுதப்படை இயக்குநராக பதவி வகித்து வந்த அவர் 2012-ம் ஆண்டு பணிக் காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்றார்.
இருப்பினும், விஜயகுமார் ஐ.பி.எஸ்-க்கு மத்திய அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. 2018-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டார். பின்னர், உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியில் இருந்து விஜயகுமார் ஐ.பி.எஸ் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணத்தால் ராஜினாமா செய்ததாக கூறியுள்ள அவர், பிரதமர் மோடி, அமித்ஷா, உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.