தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41-வது மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் வணிகர்கள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள், ஜிஎஸ்டியில் நிலவிவரும் குழப்பங்கள் மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மாநில தலைவர் விக்ரமராஜா பேசியதாவது;-
இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமானது வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதம், ஆகியவற்றை எதிர்த்து போராடும் சூழலுக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஜி.எஸ்.டி சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தங்களை மேற்கொள்ள உள்ளோம்.
வருகின்ற மே 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டில் "வணிகர் அதிகார பிரகடன மாநாடு" என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் எங்களை அழைத்து பேசவேண்டும். இந்த நிலை தொடருமானால் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தும் அறிவிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்படும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 1.5 கோடி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 1 சதவிதம் இணக்கம் வரியை வியாபாரி கட்டுகின்றனர். அதனை திரும்ப பெற வேண்டும். ஜி.எஸ்.டி குளறுபடிகளை வைத்துக்கொண்டு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
எங்க நிலைப்பாடுகளை அரசு புரிந்து கொண்டு சட்ட விதிகள் எளிமைப்படுத்த வேண்டும். மாநில அரசு கட்டிட வரி விதிப்பு, லைசன்ஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். வணிகர்கள் சங்க பிரதிநிதிகளை வைத்து சீரமைப்பு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“