/indian-express-tamil/media/media_files/jJahOwHzYAVHQ6O6hHt0.jpg)
விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று (ஜூலை 8) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த தி.மு.கவைத் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை என தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டனியில் பா.ம.க போட்டியிடுகிறது. பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித்துள்ளது.
இவர்கள் தவிர சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள். மொத்தமாக 29 பேர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இருப்பினும் களம் திமுக,பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1 மாதம் நடைபெற்று வந்து சூறாவளிப் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.
இன்று இடைத் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மும்முரம் காட்டுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.