தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் இன்று அறிவித்தார். தமிழகத்தில், அக்டோபர் 21 வாக்குப்பதிவு என்றும் அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - நாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே
அதிமுக விருப்ப மனு அறிவிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-10-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள்,
தலைமைக் கழகத்தில் 22-9-2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், 23-9-2019 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - 2019
விருப்ப மனு பெறுதல் : 22. 9. 2019 மற்றும் 23.9.2019. pic.twitter.com/YjRmlnB7Ba
— AIADMK (@AIADMKOfficial) September 21, 2019
அதேபோல், விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு செப்.23ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக விருப்ப மனு அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், செப்.23, திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள், ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வேட்பாளர் நேர்காணல், செப்.24, செவ்வாய்க்கிழமை, அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும்," என அறிவித்துள்ளார்.
அதேசமயம், அமமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.