விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3.5 வயது குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணத்துக்கு பள்ளியின் அலட்சியமே என்று கூறிய பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேல் - சிவசங்கரி தம்பதியின் குழந்தை லியா லட்சுமி. 3.5 வயதான இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள சென் மேரீஸ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். பெற்றோர் இன்று வழக்கம்போல குழந்தையை பள்ளியில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, குழந்தையானது மதியம் 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். பின் கழிவறையில் இருந்து அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு அறியாமல் சென்ற குழந்தை லியா, செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி மீது ஏறியுள்ளார். ஆனால், அந்த மூடி துருப்பிடித்து இருந்ததால், குழந்தையின் எடை தாங்காமல் அப்படியே அது இடிந்து உள்ளே விழுந்ள்ளது. இதில் குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.
குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல், நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் பயந்துள்ளார். பிற ஆசிரியர்களோடு சேர்ந்து தேடுகையில், கழிவுநீர் தொட்டியீன் மூடி உடைந்திருந்ததை பார்த்துள்ளனர். அங்கே தேடியபோது, உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் குழந்தை உயிரிழந்ததை விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயனைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் தீயனைப்பு துறையினரும் போலீசாரும் குழந்தையை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால். ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தவுடன், பள்ளிக்கு விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி சார்பில் பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ‘உங்கள் குழந்தைகளை விரைவாக வந்து அழைத்து செல்லவும்’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். என்னவென்று புரியாமல் பெற்றோர்கள் அலறிடித்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும், பள்ளியில் ஒரு குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் தெரியவந்ததையடுத்து, பள்ளி வளாகம் முன்பு பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியர் பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய பெற்றோர், மற்றும் பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் - சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பெற்றோர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறியலைக் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா நேரில் விசாரனை செய்தனர். தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியும் அளித்தனர்.
இதனிடையே, கழிவுநீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தபின், குழந்தையை ஆசிரியர்கள் மீட்டு காரில் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து 3.5 வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமை. குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரொ, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“