சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகே உள்ள திருமன்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையில் சாலை மற்றும் பாலம் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், சுமார் 25 அடி பள்ளத்தில் இறங்கி சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், இறந்தவர்களின் சடலத்தை 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல பெரியார் கால்வாயை கடக்க வேண்டும்.
தற்போது, இந்த கால்வாயில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் 25 அடி ஆழமும், 50 அடி அகலமும் கொண்ட பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் அந்த பள்ளத்தில் இறங்கி, பின்னர் வயல்வெளிக்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வழியாகச் சடலங்களை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மயானத்திற்கு செல்லும் பாதையில் சாலை அமைத்துத் தரவும், பெரியார் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.