தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்தனர். ஒப்பந்தத் தொழிலாளர்களாக 3,500 பேர் வரை பணியாற்றிவந்த நிலையில், அங்கு மக்களுக்கு பெரும் வாழ்வாதாரமாக அந்த ஆலையே அமைந்தது. மேலும், பலர் அந்த ஆலையை நம்பி கடன் உதவித் தொகை மூலம் கனரக வாகனங்கள், டிப்பர் லாரி ஆகியவற்றை வாங்கி இயக்கி வந்தனர். திடீரென்று ஆலை மூடப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு கடன் சுமையால் தவித்து வாகனங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
காப்பர் தேவைக்கு இந்தியா இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்தது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில அன்னிய சக்திகள் போராட்டம் நடத்தியவர்களுக்கு தாராளமாக நிதியுதவி அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தினர். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகவும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படும் என்றும் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அப்போது, ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. அதையே காரணம் காட்டி, 2018-ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை சமூகப்பொறுப்போடு பல நலத்திட்டங்களை செய்து வந்தது. ஆலை 2018-ம் ஆண்டில் மூடப்பட்டாலும், கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க முன்வந்தது. உச்சநீதிமன்ற அனுமதியோடு சுமார் 2,266 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் பல மாவட்டங்களுக்கும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. ஆலைக்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் கிடையாது என்று மக்கள் கூறினர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும் தூத்துகுடி கிராமமக்களுக்கு அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகைகள், இலவச மருத்துவ முகாம்கள், திருமண உதவித் தொகைகள், இளைஞர் திறன் மேம்பாட்டு திட்ட உதவிகள் ஆகியவை நிறுத்தப்படவில்லை. சுமார் 11 கிராமங்களுக்கு இன்றளவும் குடிநீரும் அனுப்பி வருகிறார்கள். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வழங்கப்பட்டன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதால் தொழில் வளர்ச்சி குறைந்து, வருமானம், வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்து வறுமையால் இளைஞர்கள் குடிப்பழக்கம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க, மீண்டும் வேலை வாய்ப்பு உருவாகும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவது அவசியம். ஆலையில் தாமிர உற்பத்தி பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் திமுக எம்.பி. கனிமொழியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.